முழுவீச்சில் நெல் கொள்முதல் தயாராகிறது வாணிப கழகம் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, January 9, 2022

முழுவீச்சில் நெல் கொள்முதல் தயாராகிறது வாணிப கழகம்

முழுவீச்சில் நெல் கொள்முதல் தயாராகிறது வாணிப கழகம் பொங்கலுக்கு பின் நெல் கொள்முதல் மிக அதிகளவில் அதிகரிக்கும் என்பதால், விரைந்து கொள்முதல்செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்குமாறு, வாணிப கழகத்தை, உணவு துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் அக்., 1 முதல் செப்., வரை நெல் கொள்முதல் சீசன்.அதன்படி, 2021 அக்., துவங்கிய நடப்பு சீசனில், விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் 100 கிலோ எடை உடைய உயர்தர நெல்லுக்கு, மத்திய அரசு, 1,960 ரூபாயும்; சாதாரண நெல்லுக்கு 1,940 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்குகின்றன.அவற்றுடன் சேர்த்து தமிழக அரசு உயர்தர நெல்லுக்கு, 100 ரூபாயும்; சாதாரண நெல்லுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்குகிறது. முந்தைய சீசனில் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பு சீசனில் 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை 1.13 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 7 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.பொங்கலுக்கு பின் நெல் கொள்முதல் அதிகரிக்கும் என்பதால், விரைந்து கொள்முதல் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்குமாறு, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வியாபாரிகள், இடைத்தரகர்களின் குறுக்கீடுகளை தவிர்க்க, நெல் கொள்முதலுக்கான பணம், விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. நெல்லை எடுத்து வந்து காத்திருப்பதை தவிர்க்க, எந்த தேதிக்கு வர வேண்டும் என்பதும் எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பப்படுகிறது.நேரடி கொள்முதல் நிலையங்களை, விவசாயிகள் விரும்பும் இடத்தில் திறக்க, கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின் நெல் கொள்முதல் அதிகரிக்கும். இதனால் விரைந்து கொள்முதல் செய்ய 3,000 கொள்முதல் நிலையங்கள் வரை திறக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதலாகவும் திறக்கப்படும்.நெல் கொள்முதலில் 'கமிஷன்' கேட்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக, மண்டல முதுநிலை மேலாளர்களிடமும், சென்னையில் உள்ள வாணிப கழக உயரதிகாரிகளிடமும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment